Published : 09 Nov 2021 10:51 AM
Last Updated : 09 Nov 2021 10:51 AM

தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க நிதித் துறைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

சென்னை, மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் இடுப்பு அளவு தண்ணீர் உள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு, அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று தாங்கள் அளித்துள்ள வாகுறுதிக்கு தமிழக மக்கள் நன்றியை உரித்தாக்குவார்கள்.

ஆனால், அதையும் தாண்டி, குடிசைகள், வசிப்பிடங்கள் சேதங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். அதனால், நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட்டு தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x