ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் மோதல்: 3 பேர் காயம், 7 பேர் மீது வழக்கு பதிவு

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் மோதல்: 3 பேர் காயம், 7 பேர் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். பாத்திமா நகர் மீனவ பெண்கள் சிலர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நேற்று காலை மனு அளிக்க இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களை அப்பகுதியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தரப்பைச் சேர்ந்த தோமையார் நகர் 8-வது தெரு கெபிஸ்டன் (25), ஆதரவு தரப்பைச் சேர்ந்த பாத்திமா நகர் ஜூடு ராஜேஷ் (41), ஜேசுராஜா (40) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதரப்பு புகாரின் பேரில் 7 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தரப்பைச் சேர்ந்த கெபிஸ்டனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் செல்வராஜ் என்பவர் தலைமையிலும், நாம் தமிழர் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வே.வேல்ராஜ் தலைமையிலும் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in