Published : 08 Nov 2021 09:22 PM
Last Updated : 08 Nov 2021 09:22 PM

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம்: அரசாணை வெளியீடு

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் இதனை அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முதல் அறிவிப்பாக அது இருந்தது.

அப்போது அவர் பேசுகையில், "அரைநூற்றாண்டு காலத்துக்கு தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர். 13 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தலைகுனியாதவர். 80 ஆண்டு கால வாழ்க்கையில் 60 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. தோல்வி அவரைத் தொட்டதே இல்லை. அவர் இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞாநி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைக் கொடுத்தவர்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நினைவிடம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், 24.08.2021 அன்று முதல்வர், கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின், சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுரையும் அறியக்கூடிய வகையில் நவீன விளக்கப் படங்களுடன் சென்னை காமராஜர் சாலை அண்ணா நினைவிடம் வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x