Published : 08 Nov 2021 07:20 PM
Last Updated : 08 Nov 2021 07:20 PM

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 8.11.2021 வரை 346.1 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 241.2 மி.மீட்டரை விட 43 சதவீதம் கூடுதல் ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 14.2 மி.மீட்டர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 67.08 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 48 நிவாரண முகாம்களில், 1,107 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3,58,500 உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

14 சுரங்கப்பாதைகளில் நீர் வெளியேற்றம்:

மழை நீர் தேங்கியுள்ள 290 பகுதிகளுள், 59 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 231 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 14 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய 2 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 75 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. 178 மருத்துவ முகாம்கள் மூலம் 3947 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

15 மண்டலங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x