

விருத்தாசலம் அருகே வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் நெடுஞ்சேரி-பவழங்குடி கிராம மக்கள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
வடகிழக்குப் பருவமழை அதிகரித்துள்ள சூழலில் கடலூர் மாவட்டம் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீ முஷ்ணம்-கருவேப்பிலங்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு இடையே வெள்ளாறு செல்கிறது.
இந்த நிலையில் பொருட்கள் வாங்குவதற்காக ஸ்ரீ முஷ்ணம் பவழங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளாற்றைக் கடந்து, கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த நெடுஞ்சேரி வழியாக விருத்தாசலம் செல்வது வழக்கம். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆபத்தான சூழலில் இரு கிராம மக்களும் கருவேப்பிலங்குறிச்சி சுற்றிச் செல்ல தூரம் அதிகமென்பதால், ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
இன்று பவழங்குடியில் உள்ள ஒருவர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு குடும்பத்தினர் கருவேப்பிலங்குறிச்சி வழியாக செல்வதைத் தவிர்த்து, ஒருவராக கைகோத்து வெள்ளாற்றைக் கடந்து செல்லும் காட்சி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே பவழங்குடி-நெடுஞ்சேரி இடையே பாலம் அமைத்து தந்தால் மழைக் காலத்தில் இரு கிராம மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
இந்தத் தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் அப்பகுதியில் முகாமிட்டு, ஆற்றைக் கடந்து செல்ல வேண்டாம் எனப் பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.