

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்டுள்ள 25 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தூத்துக்குடயில் 22.5.2018-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 71 பேரில் 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது 27 பேரில் 25 பேர் நேரில் ஆஜராகினர். பின்னர் விசாரணையை டிச. 1-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியதாவது:
"உயர் நீதிமன்ற உத்தரவுபடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிஐ 71 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பொதுமக்கள் கண் எதிரே 13 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை. போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை. குற்றப்பத்திரிகையிலும் போலீஸார் குற்றவாளிகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். துப்பாக்கிச்சூடு வழக்கில் போலீஸார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிபிஐ விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் எனக்கேட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்" என்றார்.