Last Updated : 07 Nov, 2021 08:33 PM

 

Published : 07 Nov 2021 08:33 PM
Last Updated : 07 Nov 2021 08:33 PM

கண்ணகி, முருகேசன் கொலை வழக்கு: தொடரும் மிரட்டலால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மதுரையில் பவுத்த பொதுவுடைமை இயக்கம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினத்துடன் (நடுவில்) பங்கேற்ற முருகேசன் குடும்பத்தினர்.

மதுரை 

கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகும் பாதிக்கப்பட்டோருக்கு மிரட்டல் தொடர்வதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக முருகேசன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் 2003-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆணவக் கொலை வழக்கில் 18 ஆண்டுக்கு பிறகு கடலூர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. ஒருவருக்கு தூக்கு தண்டனை, 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடலூர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், முருகேசன் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக மதுரையில் பவுத்த பொதுவுடமை இயக்கத்தினர் இன்று கலந்துரையாடல் நிகழ்வு நடத்தினர்.

இதில் முருகேசன் தந்தை சாமிகண்ணு, சித்தி சின்னப்பிள்ளை, சித்தப்பா அய்யாசாமி மற்றும் தம்பிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

பின்னர், பவுத்த பொதுவுடைமை இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பொ.ரத்தினம் கூறியதாவது:

கண்ணகி, முருகேசன் கொலை வழக்கில் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆதிக்க மனநிலையில் இருப்பவர்கள் தங்களை திருத்திக்கொள்ள தயாராக இல்லை. தீர்ப்பு வந்த பிறகும் முருகேசன் குடும்பத்தினருக்கு எதிரான கொடுமை நீடிக்கிறது.

முருகேசன் பெற்றோர் மற்றும் தம்பிகளை அக். 14-ல் 7 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதே காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவலர்கள் வழக்கில் தண்டிக்கப்பட்டும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகும் முருகேசன் குடும்பத்தினருக்கு இதுவரை போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை. இந்த வழக்கை நடத்தியதற்காக என்னையும் பலர் மிரட்டி வருகின்றனர். இதனால் முருகேசன் குடும்பத்தினருக்கும், எனக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x