சொந்த கிளினிக் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ்

பிரதிநிதித்துவப்படம்.
பிரதிநிதித்துவப்படம்.
Updated on
1 min read

சொந்த கிளினிக் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2018ல் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி மனு அளித்திருந்தார்.

அதில், "புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் என்பிஏ எனப்படும் வெளியில் சிகிச்சை தராமல் இருப்பதற்கான நான் பிராக்டிஸ் அலவன்ஸ் (Non Practice Allowance) பெற்றுக்கொண்டு தனியாக கிளினிக் நடத்திவருவதோடு, இவர்களின் கிளினிக்குக்கு வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் முன்னுரிமை அளித்து பிற நோயாளிகளை புறக்கணித்து வருகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு, அலவன்ஸ் பெற்றுக்கொண்டு தனியாக கிளினிக் நடத்துவோர் பெயர் பட்டியலை ஆர்டிஐ மூலம் பெற்றுத் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறினார்.

இதுகுறித்த விபரங்களை ஆர்டிஐ மூலம் 04.10.2019 அன்று சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் மனு செய்யப்பட்டது. அவர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகவல் தர கடிதம் அனுப்பியும் எவரும் தகவல் தரவில்லை. இந்நிலையில் 30.11.2019 அன்று டிஎம்எஸிடம் முதலாவது மேல்முறையீடு செய்ததற்கு அவரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மத்திய தகவல் ஆணையத்திடம் ரகுபதி முறையிட்டார். அதையடுத்து கடந்த 04.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடைபெற்றது.

அப்பொழுதும் நலவழித்துறை இயக்குனரகம் சார்பில் எவரும் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து மத்திய தகவல் ஆணையம் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனரகத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும், துறைரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியதுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in