செம்பரம்பாக்கம், புழல்  ஏரிகள் இன்று திறப்பு: கனமழையால் நிரம்பி வருவதால் நடவடிக்கை

செம்பரம்பாக்கம், புழல்  ஏரிகள் இன்று திறப்பு: கனமழையால் நிரம்பி வருவதால் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் நிறைந்து வருவதால் இன்று உபரி நீர் திறக்கப்படுகிறது.

தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்ற மழையைப் பார்த்திராத மக்கள் மகிழ்ச்சியும் அதேசமயம் அச்சமும் அடைந்தனர்

இதன் எதிரொலியால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் அணையின் முழுக்கொள்ளளவு 25.55 அடி உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு தற்போது 21.22 அடியாக உள்ளது.

இதுபோலவே புழல் ஏரியும் நிறைந்து வருகிறது. இதன் நீர் மட்டம் 21.20 அடியாகும். மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.


இதனால், செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் உபரி நீர் திறந்துவிடுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், புழல் ஏரி காலை 11.00 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏரிகள் திறக்கப்பட உள்ளதால், அதன் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in