Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி பயணிகள் எண்ணிக்கை மீண்டும் 1.85 கோடியானது: டீசலுக்கு பதிலாக மின்சார பயன்பாட்டை அதிகரிக்க முடிவு

சென்னை

கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் 1.85 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பலமாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் சேவை, கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் கரோனா அச்சம் இருந்ததால், பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பெரும்பாலான மக்கள் தங்களது பயன்பாட்டுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களை பயன்படுத்தினர்.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட அரசின் நடவடிக்கையால் மக்களிடம் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. மக்களிடம் அச்சமும் குறைந்து வருகிறது. அதன்பிறகு, அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், கரோனா பாதிப்புக்கு முந்தைய அளவில் இருந்த பயணிகள் எண்ணிக்கையை அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது மீண்டும் பெற்றுள்ளன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பேருந்துகள் வழக்கமாக ஓடினாலே, வருவாய் செலவுக்கான இடைவெளியில் கணிசமான அளவுக்கு வருவாய் இழப்பு இருக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43 வசூலானால் மட்டுமே வருவாயும், செலவும் சரிசமமாக இருக்கும். கரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி ஒரு கி.மீ பேருந்து ஓடினால் ரூ.33-தான் வசூலானது. கரோனா பாதிப்பு காலத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி, குறைந்தபயணிகளுடன் பேருந்துகள் இயக்கினோம். பெரும்பாலான வழித்தடங்களில் 10 பயணிகளுடனே பேருந்துகள் சென்றன. ஒட்டுமொத்த பயணிகளின் தினசரி எண்ணிக்கை என்பது 75 லட்சமாக குறைந்தது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் மீண்டும்இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் பயணிகள் வருகைஅதிகரித்து வருகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் 1.85 கோடியாக உயர்ந்துள்ளது. நகர பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் 40லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், பெண்கள் மட்டும் 60 சதவீதம் பேர் பயணம் செய்கின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழங்களில் செலவை குறைத்து, வருவாயை பெருக்க அரசு பல்வேறு திட்டங்களை படிபடியாக செயல்படுத்தவுள்ளது. டீசலுக்கு பதிலாகமின்சார பேருந்துகளை அதிகரித்துஇயக்கவுள்ளோம். அடுத்தசில மாதங்களில் முதல்கட்டமாக500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். பொதுபோக்குவரத்து வசதி என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை விபத்துகள், போக்குவரத்து நெரிசல் குறைப்பு உள்ளடக்கியது. எனவே, பொதுபோக்குவரத்து வசதியை பாதுகாக்கும் வகையில் சாலை வரி மற்றும் சுங்கச்சாவடி கட்டணத்தை குறைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x