வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோமில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதன் காரணமாகவே வார இறுதி நாட்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதைத் தொடங்கியுள்ளோம்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 32,36,622 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இயலும். இது பயனுள்ள திட்டமாக அமையும் என்று நம்புகிறோம்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தி வந்த தமிழக அரசு, அசைவப் பிரியர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தி வந்தது. இதுவரை 7 தடுப்பூசி முகாம்களை நடத்தியுள்ள தமிழக அரசு நாளை 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டு இருந்தது.

இதனிடையே, வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால் அடுத்து வந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவும், மழையினாலும் சனிக்கிழமையான இன்று நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in