Published : 05 Nov 2021 08:42 PM
Last Updated : 05 Nov 2021 08:42 PM

சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளைக் குறைத்தது மத்திய அரசு: தமிழகத்தில் ரூ.10 வரை விலை குறைப்பு

சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை ரூ 10 வரை குறைந்துள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கடந்த ஓராண்டாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியை 2.5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக அரசாங்கம் குறைத்துள்ளது.

இந்த எண்ணெய்களின் மீதான வேளாண் செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதமாகவும் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குறைப்பின் விளைவாக, கச்சா பாமாயிலுக்கு 7.5 சதவீதம் மற்றும் கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதம் மொத்த வரி விதிக்கப்படுகிறது.

ஆர்பிடி பாமோலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்படுவதற்கு முன், அனைத்து வகையான கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான வேளாண் உள்கட்டமைப்பு செஸ் 20 சதவீதம் ஆக இருந்தது. குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மீதான வரி 8.25 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி தலா 5.5 சதவீதம் ஆகவும் இருக்கும்.

சமையல் எண்ணெய்களின் விலைகளைக் கட்டுப்படுத்த பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை அரசு குறைத்துள்ளது, தேசிய உற்பத்தி மற்றும் உபஉற்பத்தி பொருட்கள் இணையவழி வர்த்தக அமைப்பில் (என்சிடிஇஎக்ஸ்) கடுகு எண்ணெயின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அரசின் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் ஒரு கிலோவுக்கு ரூ 10 வரை சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்துள்ளன. உதாரணமாக, ஒரு கிலோ பாமாயிலின் விலை ரூ 7-ம், கடலை எண்ணெயின் விலை ரூ 10-ம் குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவ.3 ஆம் தேதி இரவு, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்தது. மேலும், மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்குமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில் தற்போது, சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x