Published : 05 Nov 2021 08:48 AM
Last Updated : 05 Nov 2021 08:48 AM

சென்னையில் அதிகரித்த காற்று மாசு: பட்டாசு வெடிப்பு நேரக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காத மக்கள்

பட்டாசு வெடிப்பு நேரக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசு பலமடங்கு அதிகரித்துள்ளது.

முன்னதாக பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, பேரியம் என்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசு கள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நேரக் கட்டுப்பாட்டையோ அல்லது சரவெடி கட்டுப்பாட்டையோ யாரும் மதித்ததாகத் தெரியவில்லை.
தமிழகத் தலைநகரான சென்னையில் பட்டாசு புகை சூழ்ந்ததால் காற்று மாசு அதிகரித்தது. காற்று மாசின் அளவு 100ஐ கடந்தது. குறிப்பாக வடசென்னையில் மணலி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாடின் அளவு 344 என்றளவை எட்டியது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 270க்கும் மேல் அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் காற்று மாசுபாட்டின் அளவு:

மணலி - 344
நுங்கம்பாக்கம் -272
பொத்தேரி -151
அம்பத்தூர் - 150
சேலம் - 275
திருப்பூர் - 233
மதுரை -188
கோவை -178

தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் தான் பட்டாசு குறைவாக வெடிக்கப்பட்டது. அங்குதான் காற்று மாசுபாட்டின் அளவும் குறைவாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x