

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் மற்றும்அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழகசகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபஒளி திருநாளாம் தீபாவளி,தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாள் நாட்டுமக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. இவ்விழா அனைவர் வாழ்விலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும், வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி: அனைத்து மக்களின் வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இந்த தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்தி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தூயவழியில் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தீமை மறைந்துநன்மை பெருகும் என்ற நம்பிக்கையோடு ஏழை, எளிய மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல், நாட்டை சூழ்ந்துள்ள தீமைகளை ஒன்றுசேர்ந்து வெல்வோம் என தீபாவளி நன்னாளில் அனைவரும் சபதம் ஏற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபஒளி திருநாள்வகை செய்யட்டும். தமிழக மக்களுக்கு சமூகநீதி ஒளியால் கிடைக்கும் நல்லின்பம் மட்டுமின்றி அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை,நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை என அனைத்து நன்மைகளும் கிடைக்க வாழ்த்து கிறேன்.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி: மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மலர்வதாக. போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு விலகுவதாக.
சமக தலைவர் ஆர்.சரத்குமார்: தீப ஒளித்திருநாள், ஒட்டுமொத்த தேசத்துக்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம் மற்றும் அமைதியை வழங்கட்டும். சமத்துவத்திலும், சமதர்மத்திலும் சமுதாயங்களுக்கு இடையே சுமுக நல்லுறவு, உள்ளங்களால் ஒன்றுபடட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக் கூடிய தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமையட்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம், புதிய வெற்றிப்பாதைகளை உருவாக்கட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்.
சு.திருநாவுக்கரசர் எம்பி: அறியாமை, வறுமை, தீவிரவாதம், வன்முறை இருள் அகன்று அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், காங்கிரஸ் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் விஎம்எஸ் முஸ்தபா, ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரி வித்துள்ளனர்.