Published : 22 Mar 2016 08:39 AM
Last Updated : 22 Mar 2016 08:39 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மூத்த நீதிபதிகள் 2 பேரை மாற்றக்கூடாது: தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர்கள் மனு

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரது பணியிட மாறுதல் வேண்டுகோளை ஏற்க வேண்டாம் என்று தலைமை நீதிபதியை சந்தித்து வழக்கறிஞர்கள் குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, வி.டி.கோபாலன், கே.துரைச்சாமி, கே.சீனிவாசன், ஆர்.முத்துகுமாரசாமி, எஸ்.பார்த்த சாரதி, வி.பிரகாஷ், பி.வில்சன், எம்.எஸ்.கிருஷ்ணன், ஏஆர்எல் சுந்தரேசன் உள்ளிட்ட 50 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருந்ததாவது:

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் திடீரென பணியிட மாற்றம் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமுதாய நலனுக்காக பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை அளித்த அவர்களது பணி, சென்னையில் தொடர வேண்டும்.

உயர் நீதிமன்றத்தில் சாதிய அமைப்பு, குழுரீதியாக செயல்படும் சில விரும்பத்தகாத சூழல் இருப்பதால் இங்கு பணிபுரிய விரும்பாமல் இவர்கள் மாறுதல் கேட்டிருப்பது போன்ற கருத்தை இது ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை. இந்த சூழலில் இவர்களும் மாறுதல் பெற்றுச் சென்றால் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, அவர்களது மாறுதல் கோரிக்கையை ஏற்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. விரைவில் வெளி மாநிலங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றுச் செல்ல உள்ள நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரையும் வழக்கறிஞர் குழுவினர் சந்தித்து, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x