Published : 03 Nov 2021 05:47 PM
Last Updated : 03 Nov 2021 05:47 PM

100 ஆண்டு வாழ்வாதாரம்: பஞ்சலிங்க அருவியின் பராமரிப்பை மலைவாழ் மக்களிடம் ஒப்படைக்க ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதி மலைவாழ் மக்கள்.

திருப்பூர்

100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வாதாரமாக இருந்துவரும் பஞ்சலிங்க அருவியின் பராமரிப்புப் பணியை மலைவாழ் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரி, திருப்பூர் ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை திருமூர்த்திமலை செட்டில்மென்ட்டைச் சேர்ந்த எம்.மணிகண்டன் மற்றும் மலைவாழ் மக்கள், திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்திடம் மனு அளித்துக் கூறியதாவது:

''திருமூர்த்திமலை செட்டில்மென்ட்டில் 110 மலைவாழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். செட்டில்மென்ட்டில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழு அமைத்துச் செயல்பட்டு வருகிறோம். இந்தக் குழு மூலம், சுற்றுலாத் தலமான பஞ்சலிங்க அருவிக்குச் செல்லும் வழியைச் சுத்தம் செய்தும் அருவிக்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பான விவரங்களையும் தெரிவித்து வந்தோம். அதற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 மட்டும் கட்டணம் வசூலித்து வந்தோம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் விதவைப் பெண்கள் உட்பட 10 பேர் சம்பளம் பெற்று வந்தனர். எஞ்சிய பணத்தை வங்கியில் செலுத்தி, அதன் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவியும், தேவையான அடிப்படைப் பணிகளையும் செய்து வந்தோம்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இந்தக் குழு அமைக்கப்பட்டாலும், பயன்பாட்டுக்குக் கடந்த ஜனவரி மாதம்தான் வந்தது. அரசியல் அமைப்பினர் தலையீடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பஞ்சலிங்க அருவி எங்கள் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. எனவே, மேற்கண்ட அருவி பராமரிப்புப் பணியைத் தொடர்ந்து நடத்திட எங்களது செட்டில்மென்ட்டில் உள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவுக்கு வழங்க வேண்டும்''.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், அவர்கள் அளித்த மற்றொரு மனுவில், ''திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதிக்கு அருகில், அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. மலைவாழ் மக்கள் கோயில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் இயங்கத் தொடங்கியதில் இருந்து, மலைவாழ் மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன.

தமிழக அரசின் ஆணைப்படி அறநிலையத்துறை மூலம் கோயிலுக்குக் கிடைக்கும் வருமானத்தில் 10 சதவீதத்தை, அருகில் உள்ள குடியிருப்பு கிராம சபைக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்க வேண்டும். இதுவரை எவ்விதப் பணியும் எங்கள் குடியிருப்புப் பகுதிக்குச் செய்யவில்லை. எனவே அரசு ஆணைப்படி திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதிக்கு அடிப்படை வசதி செய்துகொடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x