Published : 03 Nov 2021 11:02 AM
Last Updated : 03 Nov 2021 11:02 AM

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசுப் பணி: ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

கோப்புப் படம்.

சென்னை

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசுப் பணி ஒதுக்கி அதற்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுவுக்குத் துணை மேலாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் இந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, தனது வெள்ளிப் பதக்கத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்றார் மாரியப்பன். அப்போது அவர், "டோக்கியோ பாராலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் வென்றதில் சிறிது வருத்தம் உள்ளது. எனக்கு அரசுப் பணி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அரசுப் பணி ஒதுக்கி அதற்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x