Published : 27 Mar 2016 11:42 AM
Last Updated : 27 Mar 2016 11:42 AM
தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள புகார் மனு:
அரசியல் உள்நோக்கத்தில் யாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசுவதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மூலம் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் நிருபர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தபோது, 2ஜி அலைக்கற்றை ஊழலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்பு இருக்கிறது. இதில் உண் மையான பயனாளி அவர்தான். மு.க.ஸ்டாலின் சாகித்பால்வா இடையே ரகசிய சந்திப்பு நடந்தது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் புகார் பற்றி சிபிஐ விரிவாக விசாரித்து, உண்மை இல்லையென்று கைவிட்டு விட்டது. இதற்கு முன்பு இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது வெளிப்படையாகவே மறுக்கப் பட்டது. 2ஜி வழக்கில் கனிமொழி பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் என்றும் வைகோ பேசியிருக்கிறார்.
இத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக தேமுதிக வுக்கு லஞ்சம் கொடுக்க திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருந்தார் என்றும் தனிப்பட்ட முறையில் வைகோ அவதூறாகப் பேசியுள்ளார்.
வைகோவின் பேட்டி தனி யார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. மதுரையில் வைகோ பேசியதற்கான வீடியோ சிடி ஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறி தனிப்பட்ட முறையில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூறாகப் பேசிய வைகோ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT