

தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கனமழை காரணமாக இன்று (காலை) காலை 9 மணியளவில், தலைமைச் செயலக முதல்வர் தனிப்பிரிவுக் கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அங்கு பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து தலைமைக் காவலர் கவிதா மரத்தினடியில் சிக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் கவிதாவின் குடும்பத்தாருக்கு முன்னதாக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்த நிலையில், மேலும் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி (மொத்தம் ரூ.25 லட்சம்) அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் கவிதாவின் உடலுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிற காவலர்களைக் கண்டு முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.