Published : 02 Nov 2021 02:55 PM
Last Updated : 02 Nov 2021 02:55 PM

தமிழ்நாடு நாள் சர்ச்சை; தேவைதானா இந்தக் குழப்பம்?- காந்திய மக்கள் இயக்கம் கேள்வி

சென்னை

தமிழ்நாடு நாள் கொண்டாட்ட விவகாரத்தில் மாற்றுக் கட்சிகளின் கருத்துகளுக்கு தமிழக அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் பா.குமரய்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய தமிழ்நாடு தினம், தற்போது குழப்பங்களால் சூழப்பட்டு உள்ளது. இந்தியாவில் 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. அந்தத் தேதியைப் பல மாநிலங்கள், மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன. இதேபோல மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற நவம்பர் 1ஆம் தேதியைக் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாகக் கொண்டாடுகின்றன.

மொழிவழி மாநிலப் பிரிவினை, தமிழகம் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என்ற கருத்து நிலவினாலும், வட எல்லையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையும், தென் எல்லையில் மார்ஷல் நேசமணி தலைமையும் போராடியதன் விளைவாக, இன்றைக்குத் தமிழ்நாடு என்கிற நம் மாநிலம் குறைந்த சேதாரத்துடன், நவம்பர் 1, 1956இல் மலர்ந்தது. ம.பொ.சி வற்புறுத்தலினால், 1981இல் முதல்வர் எம்ஜிஆர், நவம்பர் 1ஆம் தேதியை, தமிழ்நாடு தினமாகக் கொண்டாடினார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2006இல் முதல்வர் கருணாநிதி, தமிழறிஞர்கள் வற்புறுத்தியதால், தமிழ்நாடு பொன் விழாவைக் கொண்டாடினார்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில், இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து கடந்த இரு ஆண்டுகளாக நவம்பர் 1ஆம் தேதி, தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழறிஞர்கள் வேண்டுகோளின்படி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதியை, தமிழ்நாடு தினமாகக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் ஜனவரி 14, 1969 தேதியைத் தான் கொண்டாட வேண்டும். ஏனென்றால், அன்றுதான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குக் கிடைத்தது.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்குத் தமிழக எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், தமிழ்நாடு தினம் தொடர்பாக, அரசு அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 1 அன்று, தமிழ்நாடு தினம் கொண்டாடிய அமைப்புகளைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் பெருந்தன்மையோடு நடந்துகொண்டு, ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை, காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள், பிரச்சனைகளைத் திசை திருப்பும் முயற்சியாக அமைந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறது''.

இவ்வாறு குமரய்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x