Last Updated : 02 Nov, 2021 12:36 PM

 

Published : 02 Nov 2021 12:36 PM
Last Updated : 02 Nov 2021 12:36 PM

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: விசாரணை நவ.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் விசாரணையில் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை 8ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

தமிழக காவல்துறையில் முன்னாள் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்தவர் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து காவல்துறை முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி , செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவருக்கும் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராகவில்லை. அப்போது நடுவர் கோபிநாதன், வருகின்ற 8-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x