தலைமைச் செயலகம் அருகே மரம் சாய்ந்து விபத்து: பெண் காவலர் பலி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சென்னை தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்தமிழகக் கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக நவ.1, 2 தேதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை தொடர்கிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று (காலை) காலை 9 மணியளவில், தலைமைச் செயலக முதல்வர் தனிப்பிரிவுக் கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அங்கு பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து தலைமைக் காவலர் கவிதா மரத்தினடியில் சிக்கி உயிரிழந்தார். கவிதாவின் உடல் போலீஸாரால் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மரம் சாய்ந்ததில் அருகிலிருந்த வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகின. வேரோடு சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மரம் சாய்ந்து பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் போக்குவரத்துக் காவலர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சென்னை சின்னமலை பகுதியில் நேற்று காலை இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர், சாலையில் உள்ள பள்ளம் காரணமாக நிலை தடுமாறி மாநகர அரசுப் பேருந்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்படத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in