Published : 02 Nov 2021 07:34 AM
Last Updated : 02 Nov 2021 07:34 AM

விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்தனர்.

9 மாவட்டங்களில் இன்று கனமழை:

குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால் தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

வங்கக் கடலில் குமரிக்கடல் மற்றும்இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். அதைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

இதன் காரணமாக 2-ம் தேதி (இன்று)புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை,கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு,மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல்பகுதியில் 3-ம் தேதி வரையும், மாலத்தீவு தவிர்த்து இதர பகுதிகளில் 5-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்றுவீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x