Published : 02 Nov 2021 03:12 AM
Last Updated : 02 Nov 2021 03:12 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டு வேலூரில் அடையாளத்தை இழந்த அண்ணா கலையரங்கம்: புத்துயிர் அளிப்பாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கம். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி யால் தொடங்கி வைக்கப்பட்ட அண்ணா கலையரங்கத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் மாநகரின் பிரதான சாலையாக உள்ள அண்ணா சாலையில் செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு கடந்த 1968-ம் ஆண்டு 26,838 சதுரடி பரப்பளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 1969-ம் ஆண்டு சிறுவர் அரங்கம் திறக்கப்பட்டது. பின்னர், 22,152 சதுரடி பரப்பளவு கொண்ட கட்டிடத்துடன் அண்ணா கலையரங்கம் என பெயர் மாற்றப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 1971-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருந்த அண்ணா கலையரங்கம் மேம்படுத்தப்பட்டு 1978-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தினசரி மூன்று காட்சிகள் வீதம் முழு நீள திரைப்படங்கள் வெளியிட தொடங்கப்பட்டது.

இதற்காக பால்கனி, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என சுமார் 680 இருக்கைகள் கொண்டதாக மாற்றப்பட்டது. நகரின் மத்தியில் அரசின் குறைந்த கட்டணத்தில் வெளியிடப்பட்ட திரைப்படங்களை சாமானிய மக்கள் கண்டு ரசித்தனர்.

புத்தம் புதிய திரைப்படங்கள் இல்லாவிட்டாலும் இரண்டாம் வெளியீடு திரைப்படங்கள் வெளியிடப்பட்டு கணிசமான வருவாய் ஈட்டியது. அத்துடன் 10 ஆண்டு களுக்கு முன்பு வரை பல்வேறு அரசு விழாக்கள் அண்ணா கலையரங்கில் நடத்தப்பட்டு அதன் மூலமும் வருவாய் கிடைத்தது. ஆனால், போதிய அளவில் வருவாய் இல்லை என்ற காரணத்தை கூறி கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா கலை யரங்கம் மூடியே உள்ளது.

அண்ணா கலையரங்கில் பல்வேறு நிலை பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 18 பேரும் தற்போது வரை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் அயல் பணியாக பணியாற்றி வருகின்றனர். பரப்பான சாலையில் இயங்கிய அண்ணா கலையரங்கம் மூடியே இருப்பதால் இருக்கைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணா சாலையில் அண்ணா வின் பெயரால் இயங்கிய அண்ணா கலையரங்கம் இன்று அடையாளம் இழந்து காணப் படுகிறது. சகல வசதிகளுடன் இருக்கும் அண்ணா கலையரங்கை மீண்டும் புதுப்பித்தால் திரைப் படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் வசதியாக இருக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட அண்ணா கலையரங்கை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டா லின் புதுப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x