ஆம்னி பேருந்து அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; அரசு எச்சரிக்கை: புகாருக்கு டோல் ஃப்ரீ தொலைபேசி எண் அறிவிப்பு

ஆம்னி பேருந்து அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; அரசு எச்சரிக்கை: புகாருக்கு டோல் ஃப்ரீ தொலைபேசி எண் அறிவிப்பு
Updated on
1 min read

ஆம்னி பேருந்து அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில், பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக டோல் ஃப்ரீ தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீதான சிறப்பு சோதனை தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் 12 மண்டல இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்களின் மூலம் செயலாக்கப் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இணைந்து அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக சிறப்பு சோதனை செய்ததில் 222 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அபராதமாக ரூ.3,11,500 மற்றும் வரி ரூ.57,000 வசூலிக்கப்பட்டது. இணக்கக் கட்டணமாக ரூ.4,32,500 நிர்ணயிக்கப்பட்டது.

பின்வரும் 8 வாகனங்கள் அதிகக் கட்டணம் வசூலித்தற்காகவும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக்கப்பட்டது.
1. TN 20 BR 0973, 2. PY01CG8458, 3.NL01B1846, 4.PY01CG8457, 5.TN13V5202, 6.PY05A9255, 7.NL01B1242, 8.TN21 AU 5907.

சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு இச்சோதனை வரும் 08.11.2021 வரை நடைபெற உள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free – 1800 425 6151) மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in