அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் என்பதால் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர மற்ற நாட்களிலும் தடுப்பூசி அதிகளவில் செலுத்தவதை உறுதிப்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுபடுத்த, நோய் தடுப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்தும் செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும். பண்டிகை நாட்களில் கரோனாபரவதலை தடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லண்டன், மகாரஷ்டிரா, இந்தூர் ஆகிய இடங்களில் உருமாற்றம் அடைந்த புதிய கரோனா பரவி வருவதால் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடைசி மூன்று மாதங்கள் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்.

அதன்படி இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், சேலம் மற்றும் பல இடங்களில் அதிகரித்துள்ளது. எனவே, கொசு உற்பத்தியாகும் தண்ணீர் தேங்கும் இடங்களான டயர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்பை தொட்டி போன்றவற்றை கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.

கொசு ஒழிப்பில் மாவட்டத்துக்கு தேவையான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறைஅதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து கொசு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். பாம்பு மற்றும் பூச்சி கடிகளுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அடுத்து வரும் இரண்டு மாதங்களும் சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்குமென கருதப்படுகிறது.

எனவே, நோயை தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் குழுக்கள் ஒன்றிணைந்து நோய் தடுப்பு பணியில் கவனம் செலுத்தி, கரோனா மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in