Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

அணைகள் நிரம்பியும் தண்ணீர் தட்டுப்பாடு: உதகை நகராட்சி மீது மக்கள் குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு மேல் மழை பெய்ததால், உதகை நகராட்சிக்குட்பட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. முறையாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து 6 மாதங்களாக மழை பெய்ததால், உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ் வேலி, டைகர்ஹில்ஸ், கோரி சோலா, கிளன்ராக், ஓல்டுஊட்டி, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோயர், மார்லிமந்து அணை என அனைத்துஅணைகளும் நிரம்பியுள்ளன. ஆனால், உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘அனைத்து அணைகளும் நிரம்பியும், குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படாமல், லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுவது, சந்தேகத்தை கிளப்பியுள்ளது. முறையாக அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்தால், குடிநீர் தட்டுப்பாடே இருக்காது. லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து, செயற்கை தண்ணீர் தட்டுப்பாட்டை நகராட்சி நிர்வாகமே உருவாக்கியுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

உதகை நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘உதகையில் தண்ணீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை உள்ளதால், அப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x