Last Updated : 31 Oct, 2021 08:12 PM

 

Published : 31 Oct 2021 08:12 PM
Last Updated : 31 Oct 2021 08:12 PM

மகனுக்கு பரோல்; கே.என்.நேருவை சந்தித்த ரவிச்சந்திரன் தாய் 

திருச்சி

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ரவி என்ற ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் ராஜேஸ்வரி திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்தார்.

திருச்சியில்அமைச்சர் கே.என்.நேருவை தில்லைநகரில் உள்ள அவரது சொந்த அலுவலகத்தில் இன்று சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ராஜேஸ்வரி கூறியது:

எனது மகன் ரவி என்ற ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்று, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். விடுதலை செய்வதில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். இதனிடையே, பரோல் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றமும் தமிழ்நாடு அரசு முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வயது முதிர்வால் உடல் நலக்குறைவால் நான் அவதிப்பட்டு வருவதால், எனது மகனை 3 மாத பரோலில் விடுவிக்கவும், சட்டப்பேரவையில் நிறைவேற்ற தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிம் மனு அளித்தேன். இந்த மனுவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், முதல்வரை நேரில் சந்திக்கவும் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் கூறினார் என்றார்.

ராஜேஸ்வரியுடன் வந்த வழக்கறிஞர் திருமுருகன் கூறும்போது, “7 பேரையும் விடுதலை செய்யக் கோரி அரசு 2018-ல் தீர்மானம் நிறைவேற்றி அரசு அனுப்பிய தீர்மானம் 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ராஜேஸ்வரி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள ஆள் இல்லாத நிலையில், ரவிச்சந்திரனுக்கு இடைக்காலமாக 3 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். மனுவை 02.09.2021 அன்று விசாரித்த நீதிமன்றம், சிறைத் துறை 6 வாரத்துக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டது. 6 வாரங்கள் முடிந்த நிலையில், அரசுத் தரப்பில் இருந்து இதுவரை பரோல் உத்தரவு வரவில்லை. எனவே, அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தோம்” என்றார்.

அமைச்சருடனான சந்திப்பின்போது, திலீபன் செந்தில், மகஇக பாடகர் கோவன், மகஇக மாவட்டச் செயலர் ஜீவா, வழக்கறிஞர்கள் முருகானந்தம், ஆதி, தாஜூதீன் மற்றும் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x