Published : 05 Mar 2016 10:14 AM
Last Updated : 05 Mar 2016 10:14 AM
சிறையில் நளினியை பிரியங்கா காந்தி மிரட்டியதற்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுவிக்கப்போவதாகக் கூறி ஜெயலலிதா பித்தலாட்டம் போடுகிறார்.
சிறையில் உள்ள நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி மிரட்டி உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது. அவருக்கு எந்த வசதிகளையும் செய்து கொடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார். சிறையில் உள்ள பெண்ணை எப்படி மிரட்டலாம்? இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது கருணாநிதி தலைமையிலான அரசு. இந்த மிரட்டல் குறித்து அவரது பதில் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT