

நீட் தோல்வி அச்சத்தால் மாணவர் தற்கொலை காரணமாக விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
''பொள்ளாச்சியை அடுத்த முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் நஞ்சு குடித்துத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர் கீர்த்தி வாசன் ஏற்கெனவே 3 முறை நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இம்முறையும் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோய் விடுமோ? என்ற அச்சம்தான் அவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. மாணவர்களைக் காக்க நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் ஆளுநரின் ஒப்புதலைக் கூடப் பெறவில்லை. ஆளுநர் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற, தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதற்காகத் தனிக் குழு அமைத்து ஆளுநர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றைத் தொடர்புகொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.