Published : 30 Oct 2021 12:02 PM
Last Updated : 30 Oct 2021 12:02 PM

தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய நாளே இனி 'தமிழ்நாடு நாள்': முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:

"1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968-ம் ஆண்டு ஜூலை - 18ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லைப் போராட்டத் தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில், நவம்பர் 1ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகளை கெளரவிக்கும் வகையில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்தின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளைத் தமிழக அரசு போற்றி, சிறப்பித்து வருகிறது.

தற்போது எல்லைக் காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.5,500-ம் மருத்துவப்படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3,000-ம், மருத்துவப்படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x