

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நசீம்பி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமனுவில் கூறியிருப்பதாவது:
முத்திரைகள் அகற்றம்
வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பெட்டிகளின் மீது வைக்கப்பட்ட சீல் மற்றும் முத்திரைகளை வேட்பாளர்களின் முன்னிலையில் அகற்றப்பட வேண்டும் என்ற விதிகளை மீறி, சில வார்டுகளில் வாக்குப்பெட்டிகளின் முத்திரைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டிருந்தன. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
இதுதொடர்பாக அப்போதே எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள்எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தேர்தலில்நசீம்காத்து என்பவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந் தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிபி.டி.ஆதிகேசவலு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 45 நாட்கள் வரை பாதுகாக்கப்படும் எனவும், அந்த வீடியோ பதிவுகளை பத்திரப்படுத்தும்படி தேர்தல்அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது.
முறைகேடு புகார் வந்தால்...
அதையடுத்து நீதிபதிகள், அந்தவீடியோ பதிவுகளை 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார்கள் வந்தால் அந்த வீடியோ பதிவுகளைப் பெற்று பாதுகாக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.