

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகளின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 01 ஆம் தேதி முதல் 03 ஆம் தேதி வரை காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நியாய விலைக் கடைகளைத் திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகப் பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் நவம்பர் 1, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்னதாகப் பொருட்களை வாங்க இயலாதவர்கள் வழக்கம்போல் பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் 7ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டல இணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தெரிவித்துள்ளார்’’.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.