Published : 29 Oct 2021 03:43 PM
Last Updated : 29 Oct 2021 03:43 PM

4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 29) வெளியிட்ட அறிவிப்பு:

"தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினத்தில் 12 செ.மீ. மழையும், காரைக்காலில் 10 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, திருவாரூர் மாவட்டம் பாண்டவையார் தலைமை, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, கன்னியாகுமரி மாவட்டம் அணை, கலியல் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்

29.10.2021: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

30.10.2021, 31.10.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி / பலத்த காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x