Published : 29 Oct 2021 03:18 PM
Last Updated : 29 Oct 2021 03:18 PM

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக். 29) வெளியிட்ட அறிக்கை:

"தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் தீர்மானத்துக்கு ஆதரவாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக அந்த அணை பாதுகாப்பானதல்ல என்ற நியாயமற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதோடு, இதுகுறித்துக் கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென் தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த ஜெயலலிதா மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாக, அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதன் அடிப்படையில், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி வரை உயர்ந்தது.

இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும், சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது என்றும், அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அழுத்தம் தாங்காமல் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும், அணை பூகம்ப பாதிப்பு பகுதியில் அமைந்துள்ளது என்றும், அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் 50 லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், எனவே, இந்த அணை பாதுகாப்பானது எனக் கண்காணிப்புக் குழு கூறியுள்ளதை முழுமையாக நிராகரிப்பதாகவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது மட்டுமல்லாமல், புதிய அணை கட்டப்படுவதே அடுத்த நியாயமான நடவடிக்கை என்றும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் மாதம் இறுதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அதிக தண்ணீரைத் திறக்க உத்தரவிட வேண்டுமென்றும், கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கேரள அரசு இது மாதிரியான முறையீட்டினை உச்ச நீதிமன்றத்தில் வைத்திருக்கிறதோ என்ற ஐயம் தென் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டினாலும் அணை பாதுகாப்பாகவே இருக்கும் என நிபுணர்கள் கருத்துகள் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு ஆய்வுகள் கூறுகின்ற நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் மாதம் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரும்போது கேரள அரசின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் வலுவான வாதங்களைத் திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வைக்க வேண்டும் என்பதும், அதே சமயத்தில் கேரளாவுடனான நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தென் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கேரள அரசுடனான நல்லுறவைப் பேணிப் பாதுகாக்கும் அதேவேளையில், முல்லைப் பெரியாறு பாசன விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x