

பெண் எஸ்.பிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்தவர், தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக, கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, விழுப்புரத்தில் உள்ள மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (அக். 29) இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. மட்டுமே நேரில் ஆஜரானார்.
இதனையடுத்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகாததற்கு நீதிபதி கோபிநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, தங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கோபிநாதன், வழக்கு விசாரணையை 90 நாட்களில் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உங்களுக்கு 15 நாள் கால அவகாசம் வழங்கினால், மீதமுள்ள 75 நாட்களில் நான் எப்படி வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் நவ.1-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, அன்றைய தினம் முன்னாள் சிறப்பு டிஜிபி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகத் தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும், நீதிபதி கோபிநாதன் எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை வரும் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.