Last Updated : 29 Oct, 2021 08:53 AM

 

Published : 29 Oct 2021 08:53 AM
Last Updated : 29 Oct 2021 08:53 AM

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றம்

தமிழக அரசின் நீர்திறக்கும் உரிமையை மீறும் விதமாக இன்று முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

இந்த நீர் மின்சார உற்பத்திக்குப் பிறகு அரபிக்கடலில் கலக்க உள்ளது. தமிழக இறையாண்மையை மீறியுள்ளதுடன் பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் கட்டப்பட்ட அணையின் நோக்கம் சிதைக்கப்படுவதாக கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக கட்டுப்பாட்டிலே உள்ளது.

1979-ம் ஆண்டு இருமாநிலங்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் அணையின் பலம், பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இப்பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றது.

இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், 142அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்ததுடன் அணையை கண்காணிக்க மூவர் குழுவையும் நியமித்தது.

இருப்பினும் கேரளா இன்று வரை தொடர்ந்து அணை குறித்து பல்வேறு சர்ச்சைகளை கூறி நிர்ணயித்த அளவிற்கு நீரை உயர்த்த விடாமல் செய்து வருகிறது.

இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு 2014, 2015, 2018 என்று மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.

இந்த ஆண்டு அதிகமழைப்பொழிவினால் நீர்வரத்தும் உயர்ந்து 138அடியை கடந்து 142 அடியை விரைவில் எட்டும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கேரளபகுதிக்கு இன்று காலை நீர் திறந்து விடப்பட்டது. பொதுவாக தேனி ஆட்சியர், தமிழக அமைச்சர்கள் நீரைத்திறப்பது வழக்கம். கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்பர்.

கடந்த 2018-ம் ஆண்டு 142அடியாக உயர்ந்த போது இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால் இம்முறை இந்த மரபு மீறப்பட்டுள்ளது.

கேரள நீர்ப்பானத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்கள் ரோஷிஅகஸ்டின், கே.ராஜன் ஆகியோர் அணையில் இருந்து நீரைத் திறந்தனர்.

இந்த நீர் வல்லக்கடவு வழியாக ண்டிப்பெரியார், உப்புத்துறை வழியாக இடுக்கி அணைக்குச் செல்கிறது. அங்கு மின்சாரம் தயாரிக்க இந்த நீர் பயன்படுத்தப்பட்டு பிறகு அரபிக்கடலில் கலக்கிறது.

இதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாசனத்திற்கும்,குடிநீருக்குமான அணைநீரை இப்படி மடைமாற்றம் செய்வது அணைகட்டப்பட்டதற்கான நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது என்று அதிருப்தி கிளம்பி உள்ளது.

இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில் தமிழக கட்டுப்பாட்டில் உள்ள அணையை கேரள அமைச்சர்கள் திறப்பதே தவறு. இது மாநில இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். தேனி ஆட்சியரோ, தமிழக அமைச்சர்களோ பங்கேற்று இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல் ஆகும். நவ.11-ம் தேதி வரை 139.5அடி வரை நீரை தேக்கலாம் என்று நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில் கேரள அரசு அத்துமீறி செயல்பட்டுள்ளது. தமிழகஅரசு தனது உரிமையை விட்டுக் கொடுத்துள்ளது. மாநில இறையாண்மை மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை இவ்வாறு நடந்தது இல்லை. இதை தவறான முன்உதாரணமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் கேரளா இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளும். சிவகங்கை, ராமநாதபுரத்திற்கு இன்னமும் தண்ணீர் சென்றடையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இடுக்கி அணை மூலம் எவ்வித ஆயக்கட்டு பாசனமும் நடைபெறாத நிலையில் கடலில் கலக்கும் தண்ணீரால் முல்லைப் பெரியாறு அணையின் நோக்கம் சிதைவாக உள்ளது என்றார்.

ஐந்து மாவட்ட பெரியாறுவைகை பாசனநீர்விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறுகையில் கேரளாவின் இந்த நடைமுறை அணை ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. நீதிமன்ற உத்தரவையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிகநீர்வரத்து இருந்தும் 142அடி இலக்கை கேரளஅரசு ஒவ்வொரு ஆண்டும் தட்டிப்பறித்து வருகிறது. தேவையே இல்லாத நேரத்தில் இந்த நீரை கேரளப்பக்கம் திறக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விநாடிக்கு 513கனஅடி நீர் வெளியேற்றம்

13மதகுதிகளில் 3 மற்றும் 4 மதகுகளின் வழியே விநாடிக்கு 514கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தைப் பொறுத்து வெளியேற்றத்தின் அளவும் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அமைச்சர்களுடன் இடுக்கி ஆட்சியர் ஷீபாஜார்ஜ், தமிழக பொதுப்பணித்துறையில் இருந்து பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம்இர்வின், உதவிப் பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

அணை ஒப்பந்தநாளில் மீறப்பட்ட நடைமுறை

1886ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி திருவிதாங்கூர்-பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் 999ஆண்டுகள் அணை குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்த தினமான நேற்று தமிழக உரிமையையை மீறும் வகையில் கேரளா அணை நீரைத் திறந்து விட்டுள்ளது.

கேரள அரசைக் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(வெள்ளி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமையை தட்டிப்பறிக்கும் கேரள அரசைக்கண்டித்து பல விவசாயிகள் பேசினர். பின்பு வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x