Published : 07 Mar 2016 08:53 PM
Last Updated : 07 Mar 2016 08:53 PM

அதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: இளங்கோவன்

அதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டு பலவருடங்கள் ஆகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''எந்த அரசியல் கட்சியிலும் நடக்காத விநோதங்கள் எல்லாம் அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டு பலவருடங்கள் ஆகிறது. அங்கே ஜனநாயகத்தை எவரும் எதிர்பார்க்க முடியாது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை முப்பதுக்கும் மேற்பட்ட முறை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார். எதற்காக நீக்குகிறார்? ஏன் நீக்குகிறார்? என்று எவரும் கேள்வி கேட்க முடியாது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்கிற பாக்கியம் எவருக்கும் கிட்டியதில்லை.

ஜனநாயத்தில் அமைச்சரவை முறை என்று ஒன்று இருப்பதை அதிமுக ஆட்சியில் எவரும் பார்க்கமுடியாது. முதல்வரை அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில்தான் பார்க்கமுடியும். எந்த பிரச்சினை குறித்தும் அமைச்சர்கள் முதல்வரை நேரில் சந்தித்து விவாதிக்க முடியாது. முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகம் வருவது ஒரு செய்தியாக கருதப்படுகிறது. அப்படியே முதல்வர் வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தலைமைச்செயலகத்தில் இருப்பதில்லை. அனைத்துமே காணொலி காட்சி மூலம் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று பலரும் அறிந்திருந்தாலும் இதுகுறித்த விமர்சனத்தை எவரும் செய்ய முன்வருவதில்லை.

வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது கூட அவரது கால் சுவடுகள் மண்ணில் பட்டதில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா எப்போதுமே அனுமதி கொடுத்ததில்லை. இந்தியாவிலேயே பத்திரைக்கையாளர் சந்திப்பு நடத்தாத ஒரு முதல்வர் யார் என்று கேட்டால் அந்த பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

2016 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் விரும்பமனு பெற்று நேர்காணல் நடத்தி வருகிறார்கள். அதிமுகவில் 26,500 பேர் விருப்பமனு வழங்கி ரூ.28 கோடி கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். நேற்று விருப்ப மனு வழங்கியவர்களோடு நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தின்படி நேற்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற நேர்காணலில் நான்கு பேர் மட்டுமே பங்கேற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மதத்திலும் ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு இந்த நேர்காணல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் நேற்றோடு நேர்காணலும் முடிந்துவிட்டது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளிவந்துள்ளது. விரும்ப மனு வழங்கிய 26,496 பேர் நிலை என்ன? மீண்டும் நேர்காணல் நடக்குமா? ரூ.28 கோடி செலுத்தியவர்களின் பரிதாப நிலையை பார்க்கிறபோது அதிமுக எத்தகைய கட்சி என்பதை படம் பிடித்து காட்டுகின்றன.

அதிமுகவின் அடிப்படைத் தன்மை என்பது ஊழலை விரிவுபடுத்தி, அக்கட்சியுள்ள அனைவரும் பயன்படுகிற அதே நேரத்தில், பெரிய அளவிலான ஊழலை மையப்படுத்தி அதன்மூலம்தான் ஜெயலலிதா கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறார். இதனால்தான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் அவரது விடுதலைக்காக பல்வேறு கோயில்களில் வழிபாடு செய்து வருகிறார்கள். இதைப்போல ஒரு முன்னுதாரணத்தை இந்த நாட்டின் எந்த பகுதியிலும் நாம் பார்க்கமுடியாது.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து சர்வாதிகார முறையில் ஆட்சி செய்து ஊழலில் ஊறித் திளைத்து வருகிற ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்தவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. அதற்குரிய வாய்ப்பாக 2016 சட்டமன்ற தேர்தலில் அராஜக ஆட்சியை அகற்றுகிற மகத்தான புனிதப் பணியில் ஜனநாயக சக்தியில் ஓர் அணியில் திரளவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x