Published : 28 Oct 2021 05:25 PM
Last Updated : 28 Oct 2021 05:25 PM

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார்: எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்

மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72.

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன். மதுரை கிழக்குத் தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று 2 முறை எம்எல்ஏவாகப் பதவி வகித்துள்ளார். இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.

தன்னுடைய பதவிக் காலத்தில் திருமலை நாயக்கர் மகால் மேம்பாடு, மாரியம்மன் தெப்பக்குளத்தைச் சுற்றி அழகுபடுத்துதல், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நகர் முழுவதும் சின்டெக்ஸ் தொட்டி, ஐ.டி.பார்க், டைடல் பூங்கா போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்த உதவியவர். சவுராஷ்டிராவும், பட்டு நூல் சமூகமும் ஒன்றே என அரசாணை பெற்றுத் தந்தார். மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை உருவாகவும் பங்களிப்பு செய்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர்.

பதவிக் காலத்துக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியில் நகரக்குழு உறுப்பினராகவும் தமுஎகசவில் மாநிலத் துணைத் தலைவராவும் இருந்தார். தனக்கு வரும் ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தைக் கட்சியிடம் வழங்கிவிட்டு, கட்சி சார்பில் ஊதியமாக வழங்கப்பட்ட ரூ.11 ஆயிரம் பணத்தைக் கொண்டு எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்துவந்தார்.

மதுரை பொன்னகரம் பிராட்வே பகுதியில் மனைவி சண்முகவள்ளியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களது மகன்கள் குணசேகரன், ராஜசேகரன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கக் கோரி, என்.நன்மாறன் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் நன்மாறனுக்கு நேற்று (புதன்கிழமை) இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x