Last Updated : 28 Oct, 2021 02:30 PM

 

Published : 28 Oct 2021 02:30 PM
Last Updated : 28 Oct 2021 02:30 PM

சங்கராபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

சங்கராபுரத்தில உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை சங்கராபுரம் போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆங்காங்கே பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளை சோதனை செய்ய உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீஸார் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை நடைபெறும் இடங்களுக்குச் சென்று உரிய அனுமதி பெற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து கடை வைத்துள்ளனரா? என்றும், தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனரா? என்றும், கடை வைத்திருக்கும் இடங்களில் மின் விளக்குகளோ அல்லது உயர் மின் அழுத்தக் கம்பிகளோ உள்ளனவா? கடைகளுக்கு அருகே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனரா? என்ற சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சங்கராபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேவபாண்டலம் கிராமத்தில், சட்டவிரோதமாக அனுமதியின்றிப் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் உட்கோட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீஸார், தேவபாண்டலம் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் கந்தசாமி (62) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவரைக் கைது செய்து அவர் வைத்திருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி, பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பட்டாசுகள் பறிமுதல் செய்து அந்தக் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x