Published : 30 Mar 2016 07:37 AM
Last Updated : 30 Mar 2016 07:37 AM

பழைய வாகனங்களுக்கு கட்டாய வேக கட்டுப்பாடு கருவி: சட்டத்தை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தற்போதுள்ள பழைய வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டாயமாக வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்த்து தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் சென்னை லோக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் லாரி மற்றும் வேன் உரிமையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு வரும் லாரி, வேன் போன்ற வாகனங்களுக்கு கட்டாயமாக வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் அதை பின்பற்றவில்லை. பிறகு 80 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு கட்டாயம் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டுமென கடந்த ஆண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த புதிய சட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே நாங்கள் ஓட்டும் பழைய லாரி, வேன் போன்ற வாகனங்கள் 60 கி.மீ. வேகம் செல்லும் திறன் கொண்டவைதான். எனவே, பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த கட்டாயப்படுத்தக் கூடாது. இதே போல் தொழிலில் உள்ள பிரச்சினைகள் தீர்க்க உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும், புதிய சாலை பாதுகாப்பு சட்ட மசோ தாவை கைவிட வேண்டும், இன் சூரன்ஸ் 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை குறைக்க வேண்டும், அதிகாரிகளின் கட்டாய லஞ்சத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்து கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x