Last Updated : 27 Oct, 2021 05:53 PM

 

Published : 27 Oct 2021 05:53 PM
Last Updated : 27 Oct 2021 05:53 PM

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பி. ரமேஷுக்கு நவ.9-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

கடலூர் எம்.பி. ரமேஷை போலீஸார் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

கடலூர்

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண்டரான கடலூர் எம்.பி. ரமேஷுக்கு நவம்பர் 9-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் எம்.பி., டிவிஆர்எஸ் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர் கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 9-ம் தேதியன்று எம்.பி. ரமேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து எம்.பி. ரமேஷ் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சரண்டரானார். நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து அவர் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 13-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை விசாரணைக்கு எடுத்து சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ரமேஷ் எம்.பி. ஜாமீன் கோரிய மனுவையும் கடந்த 24-ம் தேதி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிந்து இன்று (அக்.27) கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி பிரபாகர், ரமேஷ் எம்.பி.யை நவம்பர் 9-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரை மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x