Published : 27 Oct 2021 06:02 PM
Last Updated : 27 Oct 2021 06:02 PM

தீபாவளி சிறப்புப் பேருந்து சேவை பாதிக்கப்படுமா?- போக்குவரத்துத் துறை விளக்கம்

டயர் பற்றாக்குறையால் போக்குவரத்துக் கழகங்களின் தீபாவளி சிறப்புப் பேருந்து சேவை பாதிக்கும் என்று செய்தித்தாள்கள், பிற ஊடகங்களில் வெளியான செய்தியைப் போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது.

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (போக்குவரத்துத் துறை) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் தீபாவளிக்குத் தடையில்லாப் பேருந்து சேவைகளை முழுமையாக வழங்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) மற்றும் பிற போக்குவரத்துக் கழகங்களால் இயலாத நிலை ஏற்படும் என்றும் பல்வேறு ஊடகங்களில் உண்மை நிலையை உறுதிப்படுத்தாத செய்தி வெளியாகியுள்ளது.

புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை, போக்குவரத்துக் கழகங்கள் அனைத்துப் பேருந்துகளையும் இயக்கத் தேவையான டயர் ஃப்ளோட்டை விட அதிகமாக இருப்பதால் தடையின்றிப் பேருந்துகளை இயக்க முடியும் எனப் போக்குவரத்துத் துறை, இதன் மூலம் தெரிவிக்கிறது. 15,997 புதிய டயர்கள் மே 2021 முதல் தற்போது வரை வாங்கப்பட்டுள்ளன.

மேலும் 1,000 டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும் நிலையில் உள்ளன. இதனால் தற்போதைய நிலையில், எந்தத் தடங்கலும் இல்லாமல் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்க, போக்குவரத்துக் கழகங்கள் ஏதுவான நிலையில் இருப்பதை இது காட்டுகிறது. பழைய டயர்களை ரீட்ரெடிங் செய்ய டிரெட் ரப்பர், பிணைப்பு கோந்து, பிவிசி ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங்களிடம் அனைத்துப் பேருந்துகளையும் முழுமையாக இயக்கத் தேவையான டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்கள் போதுமான அளவிற்கு இருப்பதால், தற்போதும் மற்றும் தீபாவளி பண்டிகையின்போதும் அனைத்துத் தடப் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகளை சீராக இயக்க முடியும்''.

இவ்வாறு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x