Published : 27 Oct 2021 03:00 PM
Last Updated : 27 Oct 2021 03:00 PM

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்தில் தவறு இல்லை: ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை

அதிமுக தொண்டர்களின் கட்சி. சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் கூறிய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்துத்தான் முடிவு செய்வோம் என செய்தியாளர்கள் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக உள்ள ஜே.சி.டி.பிரபாகர் இன்று (புதன்கிழமை) சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக, தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்றுகூடித்தான் முடிவை எடுப்பார்கள் என்றுதான் ஓபிஎஸ் சொன்னார். இதில் என்ன தவறு இருக்கிறது. அதிமுக தொண்டர்களின் கட்சி. ஓபிஎஸ் கூறியதில் தவறு இல்லை.

ஓபிஎஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கே.பி.முனிசாமியின் கருத்தால் தென் மாவட்டங்களில் சிலர் வேதனையடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவைச் சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தொடர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதிமுகவில் சசிகலாவைச் சேர்க்கக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணாமாக இருதரப்புக்கும் இடையே சமீப நாட்களாக கருத்து மோதல் வலுத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x