

இந்திய விமான நிலையங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், தொழிலாளர்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை வழங்கவும் இந்தியத் தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
துபாய் இந்தியத் துணைத் தூதரகத்தில் தமிழகத் தொழில் முனைவோர், துபாய் ஈமான் அமைப்பினர், அபுதாபி தமிழ்ச் சங்கம் உள்ளிட்டோர், துபாய்க்கான இந்தியத் துணைத் தூதர் அமன் பூரி, தூதரக அதிகாரிகள் ராம், காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.
இதில் தமிழகத் தொழில் முனைவோர் மற்றும் அமைப்புகள் எக்ஸ்போ 2020 தளத்தில் இந்திய பெவிலியனில் இடம்பெறுவது குறித்துக் கலந்தாலோசனை செய்யப்பட்டது. தமிழகப் பிரமுகர்கள் மற்றும் திறன் மிகுந்த தமிழகப் பள்ளிக் குழந்தைகளை இந்திய பெவிலியனில் பங்கேற்கச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஐக்கிய அரபு அமீரக வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் குறித்துக் கோரிக்கை வைக்கப்பட்டது.
குறிப்பாக விமான நிலையங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வது, தொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் இலவசக் காப்பீடு வசதி செய்வது, இறந்தவர்களின் உடலைக் கட்டணமின்றி தாயகம் எடுத்துச் செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழகத்தில் நலிவடைந்த பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றைப் புனரமைப்பது மற்றும் மேம்படுத்துவது, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை அமீரகத்திற்கு அழைத்து துபாயில் உள்ள இந்திய பெவிலியனில் கவுரவிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அமீரகத்தில் உள்ள தமிழக அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நோபல் மெரைன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சாகுல் ஹமீது, ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான், பொதுச் செயலாளர் ஹமீது யாசின், பிர்தவ்ஸ் பாஷா தொழிலதிபர்கள் டி.நடராஜன், டிகே ராமன், டாக்டர் சிவராமன் உள்ளிட்ட அபுதாபி தமிழ்ச் சங்கத்தினர் பங்கேற்றனர்.