Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் ஆலோசனை: சென்னையில் 30-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், வரும் 30-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. ஆனால், அக்கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தொடங்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக வரும் 30-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடக்க உள்ளது.

இதுதொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு, மாநில செயலாளர் சரத்பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம் பலம் நாம் அறிந்ததே. அதைநாடும் அறிந்திடும் வகையில் நகராட்சித் தேர்தல் வந்துவிட்டது. நம் பணிகளை வரும் நகராட்சி தேர்தலிலும் தொடர்வதற்கான காலம் கனிந்துவிட்டது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தலுக்கான செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் களப்பணி வியூகம் குறித்தும் கட்சியின் துணைத்தலைவர் ஏ.ஜி.மவுரியா தலைமையில், வரும் 30-ம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாநில நிர்வாகிகள், பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x