Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

அகழ் வைப்பகம் கட்டும் பணியை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்.29 கீழடி வருகிறார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிக்கு அக்.29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.

திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடந்தன.

இதில் முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை மத்திய தொல்லியல் துறையும், 4 முதல் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டன.

செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு, தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், எடைக்கற்கள் என பல ஆயிரம்தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

ரூ.12 கோடியில் அகழ் வைப்பகம்

இதன்மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது. 7-ம் கட்ட அகழாய்வுப் பணி செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் இங்கு கண்டறியப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதுதவிர கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல் அப்படியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் அக்.29-ம் தேதி கீழடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் மேற்கொண்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x