

பண்டிகை நாட்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல, பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் நோய் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை.
இந்நிலையில், பண்டிகை விடுமுறை நாட்களில் தி.நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, பாடி போன்ற பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால், தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, வணிக வளாகங்களில் உள்ள அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்குக் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். தற்போது வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் கடந்த மே மாதம் முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 9,882 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 97,553 தனிநபர்களிடமிருந்தும் ரூ.4 கோடியே 93 லட்சத்து 89,490 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 25-ம் தேதி வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 75 லட்சத்து 99,263 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.