Last Updated : 27 Oct, 2021 03:09 AM

 

Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித் துறைமுகம் உருவாகுமா?- முதல்வரின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் மீனவர்கள்

மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதி.

விழுப்புரம்

ரூ. 261 கோடி மதிப்பில் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்து, ஆய்வுக் கூட்டம் நடத்தி, 5 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மரக்காணம் பகுதிக்கு இன்று வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்துறைமுக பணிகள் தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிட்டு, செயல்படுத்த வேண்டும் என்று இங்குள்ள மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மரக்காணம் பகுதியில் எக்கியர் குப்பம், மண்டவாய் புதுக்குப்பம், பனிச்சமேடு குப்பம், அனுமந்தை குப்பம், செட்டிநகர் குப்பம், நொச்சிக் குப்பம் உள்ளிட்ட 19 மீனவர் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 1,013 மீனவர்கள் பைபர் போட் படகுகளையும்,, 50 மீனவர் குழுக்கள் விசைப் படகுகளையும், 60 மீனவர் குழுக்கள் அதி நவீன விசைப்படகுகளையும், மற்ற மீனவர்கள் கட்டுமரங்களை பயன்படுத்தியும் மீன் பிடித்து வருகின்றனர்.

இப்பகுதியில் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு மீன் பிடித் துறைமுகம் இல்லை.

பங்கிங்காம் கால்வாயில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்நிலையில் மரக்காணம் அழகன்குப்பம் பகுதி பக்கிங்காம் கால்வாயில் ரூ.139 கோடி மதிப்பில் மின்பிடித் துறைமுகம் அமைக்கபடும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மீண்டும் மரக்காணம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ. 261 கோடி மதிப்பில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மீன்பிடித் துறைமுகம் அமைய உள்ள இடத்தை அப்போதையை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் ஆய்வு செய்து, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மீனவர் பொது மக்களிடம் இதுதொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றும் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் 19 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர் பஞ்சாயத்தார்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் மற்றும் மீனவ மக்கள் கலந்து கொண்டனர். ஆனாலும் இது நாள் வரையில் இப்பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மரக்காணம் அருகே முதலியார் குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அப்போது உரையாற்றும் முதல்வர் கடந்த ஆட்சியில் தாமதப்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து, அதற்கான பூர்வாங்க பணிகளுக்கு உத்தரவிடுவார் என்று இப்பகுதி மீனவ மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x