Published : 26 Oct 2021 04:16 PM
Last Updated : 26 Oct 2021 04:16 PM

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை; எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2-ம் நாளாக ஆஜர்: 3 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை

எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக 2-ம் நாளாக ஆஜரான போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து,, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சோதனை நடத்தினர்.

அவர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீத சொத்துகளைச் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு, நேற்று (அக். 25) சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் 6 அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இன்று 2-வது நாளாக (அக். 26) விசாரணைக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த உடன் மீண்டும் விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆஜராவதாக விஜயபாஸ்கர் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், "காவல்துறையினர் விசாரணையின்போது எந்த நெருக்கடியும் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் இந்த வழக்குத் தொடர்பாக சம்மன் அனுப்பினால் மீண்டும் ஆஜராவேன். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறுவது தவறு. சொத்துகளுக்கான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்துள்ளேன். கணக்கில் வராத பணம் என்று என்னிடம் எதுவும் இல்லை. என்னிடம் உள்ள எல்லா சொத்துகளுக்கும் கணக்கு உள்ளது" எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x